About Kongu Kulam

செம்பன்குலம்

செம்பன் - செம்மன் இரண்டும் ஒன்று தான். கொங்கு வேளாளர்களின் செம்மையான குண இயல்புகளையும், நடத்தையும் உடைய சான்றோர்கள். இவர்களது முதற்காணி பொங்கலூர் நாடாகும். சோழ மன்னர்களின் படைத்தலைவர்களாக இருந்து செம்மையாக நடந்துள்ளனர். சோழன் கருத்துரைப்படி சேரனுக்குத் துணையாகப் படை உதவி செய்தனர். செம்பியன் என்ற பட்டம் பெற்றனர். செம்பியன் என்ற சோழர்களின் சிறப்புப் பெயர் இவர்களுக்கும் வந்தது.

செம்பையூர்ச் செம்பன் கும்பலில் யானும் கூட்டென வரவே, செம்பன் காவலியர் செருக்கினை அடக்கித் தம்பணன் செம்பைத் தவத்தினிலிருந்தான் என்ற குறவஞ்சித் தொடரால் அறியலாம். தொடுவாய்ப் போரில் ஓதாளன், பொன்னர், சாத்தந்தை, குழையர், செம்பன் ஆகிய ஐந்து கவுண்டர்களும் சோழனிடம் பரிசு பெற்றனர். இவர்களது முதற்காணி, குளித்தலை வட்டத்து, செம்பாபுரி, பொங்கலூர் நாட்டிலும் இதே பெயரில் ஊரை அமைத்தனர். செம்பாதவரி, செம்பாபுரி அம்மன் செம்பாக் காளியம்மன் இவர்களின் தெய்வங்கள் இக்குலத்து அமராவதிக் கவுண்டன் கம்பருக்கு அடிமை முறி எழுதிக் கொடுத்தான். காங்கேய நாட்டு பரஞ்சேர்வழி, கோவை கீரனம், மாதம்பட்டி, நாமக்கல் வட்டம், மணலி ஆகிய இடங்களில் காணி கொண்டு கரியகாளியம்மனை வைத்து வழிபட்டு வருகின்றனர். சிலர் அவினாசி அப்பரையும், காஞ்சிக் கோயில் சீதேவி அம்மனையும் வணங்கி வருகின்றனர். பூந்துறை கருமலையாண்டவனும், நசியனூர் மதுரகாளியம்மனும் கூட இவர்களின் தெய்வங்களாகும். கரூர், திருவெழுந்தூர், பரஞ்சேர்வழி, புலியூர், செம்பை முசிறி, குளித்தலை ஆகிய இடங்களையும் காணியுரிமை பெற்றுள்ளனர்.

Copyright © 2024 Global Kongu Foundation All rights reserved.